கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் சுற்றிக் கொண்டிருந்த புள்ளி மானை நீண்ட போராட்டத்திற்கு பிறகு போலீஸார் மடக்கி பிடித்து வனத்துறையிடம் புதன்கிழமை ஒப்படைத்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் கணபதி நகர் பகுதியில் ஆரம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலகம் அருகே புள்ளி மான் ஒன்று நடமாடிக் கொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் கண்டு ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தொடர்ந்து காவலர் ஆறுமுகம் உள்ளிட்ட போலீஸார் அங்கு சென்ற போது அந்த மான் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. அந்த மான் 2 கிலோமீட்டர் தொலைவில் ஆரம்பாக்கம் வால்காரமேடு பகுதியில் மாந்தோப்பில் சுற்றிக் கொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்
தொடர்ந்து போலீஸார் அந்த மானை துரத்தி வேலி பகுதியில் மடக்கி பிடித்து இது குறித்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷிற்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் டிஎஸ்பி ரமேஷ் ஆரம்பாக்கம் வருகை தந்து இது குறித்து மாதர்பாக்கத்தில் உள்ள வன சரக அலுவலக வன சரகர் சுரேஷ்பாபுவிற்கு தகவல் அளித்தார். தொடர்ந்து வனத்துறையினர் வந்து அந்த மானை மீட்டு பாலவாக்கத்தில் உள்ள காப்பு காட்டில் பாதுகாப்பாக விட்டனர்.
பிடிபட்ட அந்த மான் சுமார் 2 வயதுடைய பெண் புள்ளி மான் என்றும், சுமார் 13-15 கிலோ எடையுள்ள அந்த புள்ளி மான் தண்ணீர் தேடி பழவேற்காடு உப்பங்கழிமுக காட்டுப் பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஆரம்பாக்கம் பகுதியில் புள்ளி மான் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.