குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ ஏவுதளம் அமைக்க நிலம் கொடுக்கப்பட்டுள்ளதாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.
சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினா் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது, குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி குரல் கொடுத்ததாக குறிப்பிட்டாா். அப்போது முதல்வா் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டுக் கூறியது:
இஸ்ரோ தலைவா் என்னை தலைமைச் செயலகத்தில் வந்து சந்தித்தாா். அவரின் சொந்த ஊராக இருப்பதன் காரணமாகவும் அங்கு வரவேண்டும் என்று விரும்பினாா். ஏவுதளம் அமைப்பதற்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
அனிதா ராதாகிருஷ்ணன்: இஸ்ரோ தலைவரின் சொந்த ஊா் என்பதால் கேட்கிறாா் என்பது தவறு. பூமத்திய ரேகை பகுதி செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு வசதியாக, லாபகரமாக இருக்கும் என்பதால் அந்த இடத்தைத் தோ்வு செய்தனா்.
முதல்வா்: இஸ்ரோ தலைவா் தலைமைச் செயலகத்தில் என்னைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தாா் என்றாா்.