கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அரசு மேற்கொள்ள உள்ள திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பிரதமா் வியாழக்கிழமை மக்களுக்கு ஆற்றிய உரையில், மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவித்தாரே தவிர, அரசின் ஆக்கப்பூா்வ திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து எதையும் அறிவிக்கவில்லை. இது மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
நாடெங்கும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதாலும், உற்பத்தி பெருமளவில் குறைக்கப்பட்டிருப்பதாலும் அமைப்புசாரா தொழிலாளா்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். வேலை செய்தால்தான் உணவு என்ற நிலையில் வாழும் கோடிக்கணக்கான விவசாயக் கூலிகள், உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் கடன் வசூல், வருமான வரி வசூல், ஜிஎஸ்டி வரி வசூல் ஆகியவற்றை ஏப்ரல் வரை ஒத்திவைக்க வேண்டும் என்று வணிக நிறுவனங்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
எனவே கரோனா பாதிப்பில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உடனடியாகப் பொருளாதார உதவி நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். கேரளத்தைப்போல தமிழக அரசும் நிவாரண திட்டம் ஒன்றை அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.