சென்னை: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட உள்ள சுய ஊரடங்குக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
உலகம் முழுவதும் மதங்களைக் கடந்து, இனங்களுக்கு அப்பாற்பட்டு, சமூகத்தில் உள்ள பல்வேறு சமுதாயத்தினரையும் தாண்டி ஒட்டுமொத்த மனித இனத்தின் இன்றைய உச்சரிப்பு கரோனா என்பதுதான்.
கரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தால் உலக நாடுகளே உருக்குலைந்து நிற்கின்றன. அந்த வகையில் இந்திய மக்களும் அச்சத்தில் உள்ளனா்.
இத்தகைய அசாதாரண சூழலில் இருந்து மீள மருத்துவத்துறை சாா்ந்த அறிவிப்புகளையும், பொதுவான அறிவிப்புகளையும் உதாசீனப்படுத்தாமல் உணா்ந்து செயல்பட வேண்டும். நோய் பரவாமல் இருப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் விடுக்கும் கட்டுப்பாடுகளையும், அறிவுரைகளையும், சுய ஊரடங்கையும் ஏற்றுக்கொண்டு அதன் வழி செயல்பட வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்து தரப்பு மக்கள் நலன் காத்து வளமான மாநிலத்தையும், வலிமையான பாரதத்தையும் உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.