சென்னை: பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு குறித்த நடிகர் ரஜினியின் விடியோவை ட்விட்டரில் இருந்து நீக்கி, நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 291 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் இதுவரை 6 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வியாழனன்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது வரும் ஞாயிறன்று இந்தியா முழுவதும் மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும், அன்று காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை மக்கள் அவசியன்றி வெளியில் வரக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த கருத்தை ஆதரித்து மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று கூறி நடிகர் ரஜினிகாந்த் சனிக்கிழமையன்று விடியோ ஒன்றை, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த விடியோவில் கரோனா வைரஸ் 14 மணி நேரம் வரை பரவாமல் இருந்தால் நோய் பரவலின் மூன்றாவது நிலையைத் தவிர்க்கலாம் என ரஜினி கூறியிருந்தார்.
இந்நிலையில் சுய ஊரடங்கு குறித்த நடிகர் ரஜினியின் விடியோவை ட்விட்டரில் இருந்து நீக்கி, நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நடிகர் ரஜினி கூறிய கருத்து தவறானது என்று ட்விட்டர் பயனாளர்கள் பலரும் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து தங்களது நிறுவன விதிமுறைக்கு எதிரானது எனக்கூறி ட்விட்டர் நிறுவனம் ரஜினி வெளியிட்ட விடியோவை நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.