தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
கரோனா வைரஸால் தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பொதுவெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சுமார் 9,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வீட்டில் உள்ளவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கான அரசின் கடுமையான உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோன்று, வெளிநாடு சென்று வந்த பயணிகளின் பட்டியல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் கண்காணிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.