வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே நடமாடினால் அவர்களது பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீட்டின் முன்பகுதியில், மற்றவர்கள் அறியும் வகையில் நோட்டீஸ் ஒட்டப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், கரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்கள் சுமார் 10,000 பேர் தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதில் சென்னையில் தமிமைப்படுத்தப்பட்டவர்கள் 3,000 பேர் என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பொதுவெளியில் நடமாடுவதாக புகார்கள் எழுந்த நிலையில் இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில், 'வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அரசின் உத்தரவுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை மீறி, அவர்கள் பொதுவெளியில் நடமாடினால் அவர்களது பாஸ்போர்ட் முடக்கப்படும். மேலும், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீட்டின் முன்பகுதியில், மற்றவர்கள் அறியும் வகையில் நோட்டீஸ் ஒட்டப்படும். இதன்மூலமாக அருகில் உள்ளவர்கள் தெரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுவர்' என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .