சென்னையில் அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்காக 200 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா எதிரொலியாக நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு 12 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இதன் காரணமாக நாடு முழுவதுமே போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அத்தியாவசியப் பணிகளில், அவசரப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்காக 200 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில் தாம்பரம், கூடுவாஞ்சேரி, பூந்தமல்லி, மணலி, நெற்குன்றம், தேனாம்பேட்டை, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.