தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதுமே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 12 ஆம் வகுப்பிற்கு அனைத்துத் தேர்வுகளும் முடிவடைந்த நிலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மற்ற வகுப்புகளுக்கும் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி(ஆல்-பாஸ்) செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, உத்தரப்பிரதேசம், குஜராத், புதுச்சேரி மாநிலத்தில் இதுபோன்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
12 ஆம் வகுப்பு மறுதேர்வு:
பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் நேற்று தேர்வு எழுத வரவில்லை. இதனால் நேற்று நடைபெற்ற 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுத இயலாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.