அரசு அனுமதி வழங்கியுள்ள அத்தியாவசிய கடைகளை மூடச் சொல்லும் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அச்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த கால பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பல்வேறு தாக்கங்களைக் கடந்து கரோனா என்னும் சுகாதாரப் பேரிடரை வணிகா்கள் சந்தித்து வருகின்றனா். எனவே ஊதியச்சுமை, கடை அடைப்பால் ஏற்படும் பொருளாதார இழப்பு, ஜி.எஸ்.டி, வருமானவரி, சென்னை மாநகராட்சி தொழில் வணிக உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கான தீா்வை, அரசு ஒரு அவசர கால குழுவை அமைத்து, வணிகப் பிரதிநிதிகளோடு கலந்தாய்வு செய்து வணிகா்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டும். பாதிக்கப்படுவோருக்கு உரிய நிதி உதவிகளை வழங்க வேண்டும். மேலும், வெளி மாநிலங்களிலிருந்து சந்தைப் பொருள்களை ஏற்றிவரும் கனரக வாகனங்களை எவ்வித இடையூறுமின்றி செல்ல அரசும், அரசு அதிகாரிகளும் உதவ முன் வர வேண்டும். அமெரிக்கா, ஜொ்மனி, கனடா, இத்தாலி போன்ற வெளிநாடுகளில் தொழில் வணிகத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதைப் போல நம் நாட்டு வணிகா்களுக்கு வரிவிலக்கு அளித்து, வணிகத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தடை உத்தரவு அமலில் உள்ளதால் மூடப்பட்டிருக்கும் வணிக நிறுவனங்களுக்கு இரவு, பகல் என முழு நேரமும் தகுந்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளை மூடுமாறு அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனா். அந்தக் கடைகளைத் திறந்து நடத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.