திருநெல்வேலி மாநகர பகுதிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் 1 மீட்டர் இடைவெளியில் பொதுமக்கள் உணவருந்தும் புதிய நடைமுறை புதன்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் புதன்கிழமை அதிகாலை முதல் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் தங்கி பணியாற்றுவோர், ஏழை-எளியவர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி திருநெல்வேலி மாநகர பகுதியில் உள்ள மேலப்பாளையம், மீனாட்சிபுரம், தச்சநல்லூர், திருநெல்வேலி நகரம், பேட்டை, பாளையங்கோட்டை, மனக்காவலம்பிள்ளை நகர், அரசு மருத்துவமனை உள்பட 10 இடங்களில் உள்ள அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்பட்டன.
ஆனால், உணவருந்த வந்தவர்கள் அனைவரும் சுமார் 1 மீட்டர் இடைவெளியில் வரிசையிலிருந்து உணவுக்கான ரசீது பெறவும், உணவைப் பெற்ற பின்பும் தலா 1 மீட்டர் இடைவெளியில் நின்று உணவருந்திச் செல்லவும் மாநகராட்சியின் சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மாநகர பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் இறைச்சி வாங்க வருவோரும், அம்மா உணவகங்களில் உணவருந்த வருவோரும் 1 மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, பொதுமக்கள் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.