திருவள்ளூர் அருகே ஏரியில் மூழ்கி 3 இளம்பெண்கள் பலி
யான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே கூடப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ரமேஷின் மனைவி குமாரி(37). இவரது வீட்டிற்கு விருந்தினராக தாம்பரத்தைச் சேர்ந்த முருகன் மகள் பிரியதர்ஷினி(15) வந்துள்ளார். இந்த நிலையில் குமாரி தனது மகள்களான சங்கீதா(20), ஐஸ்வர்யா(16) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரமேஷ் மகள் செளமியா(16), செல்வராஜ் மகள் சந்தியா(17) ஆகியோருடன் பிரியதர்ஷினியையும் அழைத்துக் கொண்டு கூடப்பாக்கம் அருகே உள்ள நேமம் பகுதியில் உள்ள ஏரிக்கு குளிப்பதற்காக வியாழக்கிழமை மாலையில் சென்றார்களாம்.
இந்த நிலையில் ஏரியில் கலிங்குகள் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது சிறுமிகள் ஒவ்வொருவராக ஒன்றன் பின் ஒன்றாக திடீரென மூழ்கியுள்ளனர். இதையறிந்த குமாரி சத்தம் போட்டு அலறினாராம். இதை அருகில் இருந்த இளைஞர்கள் பார்த்து உடனே ஏரிக்குள் குதித்து சிறுமிகளை கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது, செளமியா, சந்தியா, பிரியதர்ஷினி ஆகிய 3 சிறுமிகளும் உயிரிழந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த வெள்ளவேடு காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அதையடுத்து உயிரிழந்த 3 சிறுமிகளின் சடலங்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து சகோதரிகளான ஐஸ்வர்யா மற்றும் சங்கீதா ஆகியோரை ஆபத்தான நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஏரிக்கு குளிக்கச்சென்ற 3 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வெள்ளவேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.