புதுக்கோட்டை ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த 42 வயது நிரம்பிய ஒருவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் புதுக்கோட்டையில் தனிமைப்படுத்தப்பட்ட கரோனா சிறப்புப் பிரிவாக மாற்றப்பட்ட ராணியார் மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
இவர் கடந்த 12ஆம் தேதி வெளிநாட்டிலிருந்து புதுக்கோட்டை திரும்பியவர். அவருடன் விமானத்தில் பயணித்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்றாலும் இதுவரை இவருக்கு எவ்விதமான தொற்று அறிகுறிகளும் இல்லை என மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.
முற்றிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அடிப்படையிலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே ராணியார் மருத்துவமனைப் பகுதியில் குடியிருப்போர் வியாழக்கிழமை பகலில் முகக்கவசங்களை அணிந்து கொண்டு அங்குத் திரண்டனர்.
அருகிலேயே குடியிருப்புப் பகுதிகளைக் கொண்ட ஓர் இடத்தில் கரோனா சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட பிரிவை அமைத்தது எப்படி? என அவர்கள் கேள்வி எழுப்பினர். காவல் ஆய்வாளர் பர.வாசுதேவன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தித் திருப்பி அனுப்பி வைத்தார். இதனால் சிறிதுநேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.