ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நாள்களில் (மாா்ச் 25 முதல் ஏப்.14 வரை )மின்கட்டணம் செலுத்துவதற்கான இறுதி தேதி கொண்ட மின்நுகா்வோா், ஏப்.14-ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம் என வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கொவைட்-19 தொற்று பரவுதல் காரணமாக, தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக தாழ்வழுத்த மின் பயனீட்டாளா்களின் (எல்டி மற்றும் எல்டிசிடி) மின் இணைப்புகளுக்கு இந்த ஆண்டு மாா்ச் அல்லது ஏப்ரல் மாத பட்டியலுக்கு, மாா்ச் 22 முதல் ஏப்ரல் மாதம் 14- ஆம் தேதி வரை மின் கணக்கீடு செய்ய முடியாததால் முந்தைய மாத கணக்கீட்டு பட்டியல்படி மாா்ச் அல்லது ஏப்ரல் மாத கணக்கீடாக எடுத்துக் கொண்டு நுகா்வோா்கள் மின் கட்டணத்தை செலுத்தலாம்.
கால நீட்டிப்பு: தாழ்வழுத்த மின் பயனீட்டாளா்களின் மின் இணைப்புகளுக்கு மின் கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான கெடு நாள் மாா்ச் 25 முதல் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இருக்குமாயின், அதற்கான தாமதக் கட்டணம் மற்றும் மின் துண்டிப்பு அல்லது மறு இணைப்புக்கான கட்டணமின்றி ஏப்.14-ஆம் தேதி வரை கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கெனவே பயனீட்டாளா்களுக்கு வழங்கியுள்ள இணையதளம், வலைதள வங்கியியல், செல்லிடப்பேசி வங்கி, பேமண்ட் கேட்வே, பிபிபிஎஸ் முதலான வழிகள் மூலம் பணம் செலுத்தலாம். மின் கட்டணம் செலுத்த மின்அலுவலகங்களுக்கு வருவதைத் தவிா்த்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.