கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து 60 ஆயிரம் லிட்டர் பால் ஏற்றி வந்த மூன்று லாரிகளுக்கு கிருஷ்ணகிரி ஆவின் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய நிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்திற்கு 60 ஆயிரம் லிட்டர் பால் ஏற்றிக்கொண்டு 3 லாரிகள் வந்தன. கரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சத்தால் தொழிலாளர்கள் லாரிகளை உள்ளே அனுப்ப மறுத்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். இதையடுத்து அந்த லாரிகள் உள்ளே அனுமதித்தனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பொது மேலாளர் குமரன் தெரிவித்தது: தமிழக அரசின் உத்தரவின்பேரில் கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பாலைக் கொண்டு பால் பவுடராகவும் நெய், வெண்ணெய் என மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றப்படுகிறது.
இதனால் கூட்டுறவு ஒன்றியத்திற்கு லாபம் கிடைக்கும். மேலும் அனைத்து பரிசோதனைகளுக்குப் பிறகு வாகனங்களும் வாகன ஓட்டிகளும் அனுமதிக்கப்பட்டனர் என்றார் அவர்.