புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி புதுச்சேரி சட்டப்பேரவை இன்று பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து தலைமையில் கூடியது. 4 மாத செலவீனங்களுக்கு இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் வே.நாராயணசாமி தாக்கல் செய்தார். ஊரடங்கு உத்தரவை கருத்தில் கொண்டு என் ஆர் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என அக்கட்சித் தலைவர் என். ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தார்.
எப்ரல், மே, ஜுன் மாதங்களுக்கான ரூ.2,042 கோடிக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, கரோனா குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்கக்கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கையை அதிமுக எம்எல்ஏக்கள் முற்றுகையிட்டனர். ஆனால் சபாநாயகர் விவாதத்திற்கு எடுக்காததால் அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து அதிமுக கட்சித்தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மனித உயிரைவிட முக்கியமானது இந்த உலகத்தில் எதுவும் இல்லை. கரோனா என்ற உயிர்க் கொல்லி கிருமியால் மனித இனமே இன்று அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநில மக்கள் அனைவரும் தினந்தோறும் உயிர் பயம் கலந்த பீதியோடு வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்களுடைய பயத்தை போக்கி மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டியது ஒவ்வொரு அரசின் கடமையாகும். அனைத்துச் சட்டப்பேரவை உறுப்பினர்களும் கூடியுள்ள இம்மாமன்றத்தில் இன்றைய சூழ்நிலையில் அனைத்து அலுவலையும் ஒத்தி வைத்துவிட்டு, கரோனா நோய்த்தடுப்பு சம்பந்தமாகவிவாதிக்க வேண்டும்.
மிகப்பெரிய மாநிலமான தமிழகத்தில் அஇஅதிமுக ஆட்சியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய வகையில் மருத்துவம் சார்ந்த உபகரணங்கள் மற்றும் சிறப்பு மருத்துவமனை வசதிகளையும் ஏற்படுத்தி உள்ளார். ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்படும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரண உதவி மற்றும் உணவுப் பொருட்களை அறிவித்து, அதன் பலன் உடனுக்குடன் மக்களை சென்றடைய ஏற்பாடு செய்துள்ளார்.
இன்றைய காலக்கட்டத்தில் மக்களின் நம்பிக்கை ஊட்டுகின்ற விதத்தில் புதுச்சேரி அரசின் செயல்பாடுகள் இல்லை . கடந்த 20 தினங்களுக்கு முன்பு சுமார் ரூ.20 கோடி அளவில் கரோனா தடுப்பிற்காக நம் முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். அதில் எந்த ஒரு மருத்துவ உபகரணங்களும் இன்றுவரை வாங்கப்படவில்லை. சாதாரணமான விலையில் உள்ள முகக்கவசங்கள் அரசின் சார்பில் வாங்க பட வில்லை. புதுச்சேரி மாநிலம் முழுவதும், கிருமி நாசினி தெளிக்கப்படவில்லை. இன்று வரை ஒரே ஒரு தெர்மல்ஸ்கேனர்கூட அரசின் சார்பில் வாங்க படவில்லை.
புதுச்சேரி நகராட்சியின் சார்பில் இரண்டு வண்டிகள் மட்டும் கிருமி நாசினி தெளிக்கும் பணிக்கு விடப்பட்டுள்ளது. கரோனா தடுப்பிற்காக இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 700 படுக்கைகள் தயார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரி முழுவதும் அரசின் சார்பில் 50 வென்டிலேட்டர் கூட இல்லை. ரத்தத்தை பரிசோதிக்கும் கிட் கூட இன்னும் வழங்கப்படவில்லை. இவைகளை அரசு போர்க்கால அடிப்படையில் செய்திருக்க வேண்டிய அரசு, எதையும் செய்யாததால் மக்கள் இந்த அரசு மீது அவநம்பிக்கையில் தள்ளப்பட்டுள்ளனர்.
உயிர்க்கொல்லி தொற்று நோய் சட்டம் 1897 படி அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் இல்லை. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும், தினந்தோறும் மாறி, மாறி முதலமைச்சரால் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் ஊரடங்கு உத்தரவையே கேலிக்கூத்தாக்க மாற்றியுள்ளது. சமூக இடைவெளி எங்கும் புதுச்சேரி மாநிலத்தில் கடைபிடிக்கப்படவில்லை என்றார்.