தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா உறுதி: எண்ணிக்கை 124 ஆனது
தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செவ்வாய்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:
"தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 45 பேர் தில்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள். தமிழகத்தில் இருந்து 1,500 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இதில், 1,131 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர். மற்றவர்கள் அங்கேயே இருந்துள்ளனர். இந்த 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 45 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களே தாமாக முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பாதித்தவர்கள் அனைவரது உடல்நிலையும் சீராகவே உள்ளது." என்றார்.
இதன்மூலம் தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.