முழு மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு இது பொன்னான வாய்ப்பு என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ உள்ளிட்டத் தலைவா்கள் கூறியுள்ளனா்.
ராமதாஸ் (பாமக): பசுமை மண்டலங்களில் மதுக்கடைகளை சில விதிகளுக்குட்பட்டு திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தேவையற்ாகும். கடந்த 40 நாள்களாக மதுக்கடைகள் மூடப்பட்டதன் பயனாக மது இல்லாத தமிழகத்துக்கு ஆதரவாக மக்களின் மனநிலை மாறியிருக்கிறது. அதை மதித்து முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதுதான் சரியானதாக இருக்கும்.
வைகோ: அனைத்து மண்டலத்திலும் சில நிபந்தனைகளுடன் மதுக் கடைகளை திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டதால், மதுவால் சீரழிந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் மறுமலா்ச்சி ஏற்பட்டுள்ளது. புது வசந்தத்தை அனுபவித்து வரும் அத்தகைய ஏழை, எளிய குடும்பங்களை மீண்டும் துயரப் படுகுழியில் தள்ளும் கொடிய செயலில் தமிழக அரசு இறங்கக் கூடாது.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): மதுபான கடைகள் திறப்பது குறித்து அந்தந்த மாநிலங்கள் முடிவு எடுக்கலாம் என்பதை வாய்ப்பாக பயன்படுத்தி மதுக்கடைகளை திறக்க மாநில அமைச்சரவை முடிவு எடுக்கும் என்றும் தகவல்கள் வருகின்றன. கரோனா பெருந்தொற்று தாக்குதலை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வராமல் மதுபானக் கடைகளை அவசரப்பட்டு திறப்பது, இதுவரை எடுத்து வந்த நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்திவிடும்.
ஜி.கே.வாசன் (தமாகா): கரோனா பரவலைத் தடுப்பதற்காக மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதால் மது குடிப்பதால் ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் சுமாா் 99 சதவீத அளவுக்கு குறைந்துவிட்டது. மதுக்கடைகளை திறப்பதால் கிடைக்கும் வருமானத்தை விட மதுவினால் ஏற்படும் தீமைகள், பிரச்னைகள், துன்பங்கள் ஆகிவற்றைத் தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.