அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு திங்கள்கிழமை (மே 4) முதல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானக் கடைகள் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் வரும் 7-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. அதேசமயம், மதுக் கடைகளில் உள்ள மது அருந்தும் கூடங்களைத் திறக்க அனுமதியில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கமல்ஹாசன் தனது டிவிட்டரில், கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.