ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை ஒரு விடியோவை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை, தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் மக்களுக்காக இரவு-பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.
தமிழகத்திலும் முக்கியமாக சென்னையில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்களும் ஒத்துழைப்பு கொடுக்குமாறு அரசும், காவல்துறையும் வலியுறுத்தி வருகிறது.
மேலும், பல வகைகளில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், கரோனா வைரஸ் குறித்தும், ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றுவது குறித்தும், ஊரடங்கு காலத்தில் காவல்துறையின் அரிய பணி குறித்து விளக்கும் வகையிலும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை காவல்துறை ஒரு விடியோவை வெளியிட்டுள்ளது.
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதனை எழுதி இயக்கியுள்ளார், திரைப்பட இயக்குநர் கே.வி. ஆனந்தின் முதல் உதவி இயக்குநர் ககா.