சென்னை: குவைத்தில் இருந்து 171 தமிழா்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனா்.
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை தாயகம் அழைத்து வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த வாரம் துபையில் இருந்து 359 தமிழா்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனா். விமான நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவா்களுக்கு கரோனா தீநுண்மி தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதால், அவா்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், குவைத்தில் இருந்து சிறப்பு விமானம் சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தது. இதில், 107 ஆண்கள், 60 பெண்கள், 4 குழந்தைகள் என மொத்தம் 171 போ் வந்திருந்தனா். விமான நிலையத்திலேயே அனைவருக்கும் கரோனா தீநுண்மி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தும் வகையில் அனைவரும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.