ஒரத்தநாடு அருகே அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கிய பசுமாட்டைக் காப்பாற்றச் சென்ற பெண் மின்சாரம் தாக்கி செவ்வாய்க்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு கீழையூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கையன் என்கிற செல்லப்பன். இவரது மனைவி சரோஜா (53). இவர் செவ்வாய்க்கிழமை தனது சினை பசுமாட்டை மேய்ப்பதற்காக அவருக்குச் சொந்தமான வயலுக்கு ஓட்டிச்சென்று மேய்ச்சல் பகுதியில் விட்டுவிட்டு உட்கார்ந்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சினை பசு அறுந்து கிடந்த மின் வயரில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.
இதைப்பார்த்த சரோஜா மின் வயரில் பசு சிக்கித் தவிப்பதைப் பார்த்து மின்சாரம் இருப்பதைத் தெரியாமல் பசுவின் மேல் கிடந்தமின் கம்பியை எடுப்பதற்கு முயன்றுள்ளார். அப்போது மின்கம்பி மின்சாரம் முழுவதும் சினை பசு மீதும் சரோஜா மீதும் தாக்கியதில் சரோஜா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பசுமாடும் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தது.
இந்த சம்பவம் அறிந்த அந்த கிராம மக்கள் ஒரத்தநாடு மின்சார வாரிய அலுவலகத்திற்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த ஒரத்தநாடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரோஜாவின் உடலைக் கைப்பற்றி அரசு பொது மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஒரத்தநாடு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.