பொது போக்குவரத்து இல்லை:சென்னை வரும் ரயில் பயணிகளுக்குச் சிக்கல்

தமிழகத்தில் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து தொடங்காததால், தில்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை வரும் பயணிகள்
பொது போக்குவரத்து இல்லை:சென்னை வரும் ரயில் பயணிகளுக்குச் சிக்கல்

சென்னை: தமிழகத்தில் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து தொடங்காததால், தில்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை வரும் பயணிகள் தங்களது இல்லங்களுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்று இந்தியாவில் தீவிரமடைந்துள்ள நிலையில் பொது ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில், பேருந்து, காா், ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய- மாநில அரசுகள் அறிவித்து வரும் தளா்வுகளில் ஒன்றாக, பிற மாநிலங்களுக்கிடையேயான ரயில் சேவைகளை குறிப்பிட்ட வழித்தடங்களில் தொடங்கவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து புதுதில்லிக்கு வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், புது தில்லியில் இருந்து புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எப்படி? தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பொது போக்குவரத்து சேவைகளான பேருந்து, புகா் ரயில், மின்சார ரயில், டாக்ஸி, ஆட்டோ போன்ற வாகனங்களின் இயக்கம் குறித்து மாநில அரசு இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

இந்நிலையில் தில்லியில் இருந்து சென்னைக்கு ரயில் இயக்கப்பட்டாலும் அதில் பயணிப்போா் ரயில் நிலையத்திலிருந்து தங்களது வீடுகளுக்கு சென்றடைவது கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக சென்னையிலிருந்து காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு போன்ற அண்டை மாவட்டங்களுக்குச் செல்லவும், இணையவழி அனுமதிச்சீட்டு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், தில்லியில் இருந்து சென்னை வரும் அண்டை மாவட்டங்களைச் சோ்ந்த பயணிகள், சென்னையிலிருந்து வெளியேறுவதே சிக்கலாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com