ஈரோட்டில் இன்று காலை குளியல் அறைக்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள கோதுமை நாகப்பாம்பைப் பிடித்த தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் பட்டறை ராஜா. இன்று காலை அவர் தனது வீட்டிலுள்ள குளியல் அறைக்குச் சென்றபோது அங்கு சத்தம் ஒன்று கேட்டுள்ளது. சத்தம் வந்த பகுதியைப் பார்த்தபோது பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பாம்பைப் பிடித்தனர். அந்தப் பாம்பு 7 அடி நீளமுள்ள கொடிய விஷத்தன்மை கொண்ட கோதுமை நாகப்பாம்பு எனத் தெரியவந்தது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பாம்புகள் குளிர்ச்சியான இடங்களைத் தேடிச்செல்லும். இதனால் சில நேரங்களில் குடியிருப்புக்குள் புகுந்து குளியல் அறை உள்பட குளிர்ச்சியான பகுதியில் சென்று விடுகிறது. பொதுமக்கள் இனி கவனமாக இருக்க வேண்டும். வீட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் பழைய பொருள்களை எடுத்துவிடவேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.