சென்னையில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பகுதிவாரியாக திட்டம் வகுத்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம் மண்டலத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், அங்கு கரோனாவைக் கட்டுப்படுத்த தனித்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ராயபுரத்தில் மட்டும் 971 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு அதிகம் உள்ள 10 பகுதிகளைக் கண்டறிந்து அங்கு தனித்திட்டம் வகுக்கப்படும்.
கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்களால் கோடம்பாக்கத்தில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிவதன் மூலம் கட்டாயமாக கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையில் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்களிடம் இருந்து ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.