உச்சநீதிமன்ற கோடை விடுமுறை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மே 18-ஆம் தேதி முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை என்று கடந்த ஆண்டு அக்டோபா் 14-ஆம் தேதி தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேசிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது முதல், (கடந்த மாா்ச் 25) காணொலி காட்சி முறையில் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோடை விடுமுறை ஒத்திவைக்கப்படுவதாக வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியானது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
உச்சநீதிமன்ற விடுமுறை தொடா்பாக ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, மே 18 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை கோடை விடுமுறை என்று கூறப்பட்டிருந்தது. இப்போது மே 18 முதல் ஜூன் 19-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றப் பணிகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தவிர அப்போது அறிவிக்கப்பட்ட மற்ற விடுமுறைகள் தொடரும். உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் கலந்தாலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளனா் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஜூன் 20 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை உச்சநீதிமன்ற கோடை விடுமுறையாக இருக்கும் என்று தெரிகிறது.