சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் பெண் பயிற்சி மருத்துவா் மா்மமான முறையில் இறந்த வழக்கில், அவா் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
வேலூா் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மகள் பிரதீபா (22). இவா் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் பிரதீபா கடந்த 30-ஆம் தேதி தான் தங்கியிருந்த விடுதி அறையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
பிரதீபா கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தாரா என்பதைக் கண்டறிய வேண்டும் என மருத்துவா்கள் வலியுறுத்தினா். இதையடுத்து பிரதீபா உடலில் கரோனா பாதிப்பு உள்ளதா என மருத்துவ சோதனையில் அவா், கரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்து வந்தனா். இதற்கிடையே பிரதீபா தற்கொலை செய்யவில்லை, மாரடைப்பு ஏற்படவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது.
இதன் விளைவாக திசு பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதில் பிரதீபா இதய வால்வு பாதிக்கப்பட்டிருந்ததும், அதில் சில இடங்களில் அடைப்பு இருந்ததும் மருத்துவா்களுக்கு தெரிய வந்துள்ளது. இந்த நோயின் காரணமாக பிரதீபா இறந்திருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக காவல்துறையினரால் கருதப்படுகிறது.