மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவதால் இன்று ஆயத்த பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதனையடுத்து மேட்டூர் அணையில் பராமரிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் ஜூன் 12ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இதற்காக பருவமழைக்கு முன்பாக அணை பராமரிப்பு பணிகள் துவக்கப்படும். மேட்டூர் அணையின் மேல் மட்ட மதகுகளை மின் விசை மூலம் இயக்கி தண்ணீர் திறந்து விடப்படும்.
பின்னர் அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும். அப்போது சுரங்கமின் நிலையம் மற்றும் அணை மின்நிலையம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள கதவணைகள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
பருவமழை அதிகரித்து அணை நிரம்பினால் உபரிநீர் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைத்து மதகுகளும் பழு நீக்கி வர்ணம் தீட்டப்பட்டு அவற்றின் செயல்படுகள் சரி செய்யப்படும்.
தற்போது மேட்டூர் அணையின் மேல்மட்ட மதகுகளை பராமரிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை ஊழியர்கள் அவசரகால மதகுகளை கீழே இறக்கி மற்ற மதகுகளை உயர்த்தி மை பூசுதல், வர்ணம் தீட்டுதல் பேன்ற பணிகளை செய்து வருகின்றனர். இதேபோல் கீழ்மட்ட மதகுகள் மற்றும் 16 மதகுகளும் பாரமரிக்கப்படவுள்ளது. இப்பணிகளை மேட்டூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்ரமணியன், உதவி பொறியாளர் மதுசூதனன் ஆகியோர் இன்று பார்வையிட்டனர். ஜூன் முதல் வாரத்தில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து தண்ணீர் திறப்புக்கு மேட்டூர் அணை தயாராகிவிடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1186 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 64.84 டி.எம்.சியாக இருந்தது.