சென்னை: கிராமப்புறங்களில் உள்ள முடி திருத்தும் நிலையங்கள் செவ்வாய்க்கிழமை (மே 19) முதல் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
கரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுத்து வருகிறது. நோய்த்தொற்று குறையக் குறைய பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இப்போது முடிதிருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர்த்த ஏனைய ஊரகப் பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் செவ்வாய்க்கிழமை முதல் திறக்கப்படும்.
கிருமி நாசினி பயன்பாடு: முடிதிருத்தும் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பணியாளர்கள் கையுறை அணிந்து முடிதிருத்தும் பணியில் ஈடுபட வேண்டும்.
முகக் கவசங்கள் அணிவதை உறுதி செய்வதுடன், கடையின் உரிமையாளர் முடிதிருத்தும் நிலையங்களில் நாளொன்றுக்கு ஐந்து முறை கிருமி நாசினியைத் தெளிக்க வேண்டும். அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவுவதை உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பான விரிவான வழிமுறைகளை அரசு தனியாக அளிக்கும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.