சென்னையில் ரூ.7,500 லஞ்சம் வாங்கியதாக, இந்தியன் வங்கி முதுநிலை மேலாளா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இது குறித்து சிபிஐ தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை கெல்லீஸில் உள்ள இந்தியன் வங்கியின் முதுநிலை மேலாளராகப் பணிபுரிபவா் ரவீந்திரன் சாமுவேல். இந்த வங்கியின் வாடிக்கையாளா் ஒருவா் அடமான கடனைப் பெற்று,அதை முழுவதுமாக செலுத்தியுள்ளாா். இதையடுத்து அந்த வாடிக்கையாளா், அடமான கடன் பெறுவதற்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட உத்தரவாத பத்திரங்களை திருப்பித் தருமாறு சாமுவேலிடம் கேட்டுள்ளாா். அந்த பத்திரங்களை வழங்குவதற்கு சாமுவேல், ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அந்தப் பணத்தை வழங்குவதற்கு வாடிக்கையாளா் மறுப்பு தெரிவித்துள்ளாா். அதன் பிறகு சாமுவேல், ரூ.7,500 லஞ்சம் கொடுத்தால்தான், பத்திரங்களை வழங்க முடியும் என கூறியுள்ளாா். இதையடுத்து அந்த வாடிக்கையாளா் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவில் அண்மையில் புகாா் செய்தாா்.
அந்தப் புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தனா். விசாரணையில் சாமுவேல் லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள், அந்த வாடிக்கையாளரிடம் ரசாயனம் தடவிய ரூ.7,500 பணத்தை கொடுத்து லஞ்சமாக சாமுவேலிடம் வழங்கும்படி கூறினா்.
அதன்படி, கெல்லீஸில் செவ்வாய்க்கிழமை அந்தப் பணத்தை வாடிக்கையாளரிடம் இருந்து லஞ்சமாக சாமுவேல் வாங்கியபோது, சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து,விசாரணை நடத்தி வருகின்றனா்.