வேதாரண்யம் பகுதியில் பலத்த கடல் காற்று
நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோரப் பகுதியில் தெற்கு திசையிலிருந்து பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடல் நீர்மட்டம் உயர்ந்து, தாழ்வான பகுதிகளில் உப்புத் தண்ணீர் உள்புகுந்து வருகிறது.
வேதாரண்யம் பகுதியில் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தொடங்கி பலமான கடல் காற்று வீசுவது வழக்கம். இது வைகாசி விசாக நாளில் தீவிரமடைந்து வீசும் பலத்த காற்றை விசாகக் காற்று எனவும், பௌர்ணமி நாளையொட்டி பெருக்கெடுக்கும் கடல் வெள்ளத்தை விசாகப் பெருவெள்ளம் எனவும் இந்தப் பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
உம்பான் புயல் வங்கக் கடலில் உருவான நாள் தொடங்கி தென் மேற்கு திசையிலிருந்து வழக்கத்தை விட வேகமான காற்று வீசியது. இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை தொடங்கி தெற்கு திசையிலிருந்து வீசத் தொடங்கியது. வியாழக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு இது வேகமடைந்து வீசி வருகிறது.
காற்றில் எழும் புழுதி மண் சாலையில் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் கண்களில் பட்டுப் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த காற்றின் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து, தாழ்வான அளப் பகுதிக்குள் உப்பு நீர் உள்புகுந்து வருகிறது.