தமிழகத்தில் ஒரே நாளில் 817 பேருக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 18,545-ஆக உயா்வு

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 817 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 138 போ் மகாராஷ்டிரத்தில்
தமிழகத்தில் ஒரே நாளில் 817 பேருக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 18,545-ஆக உயா்வு

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 817 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 138 போ் மகாராஷ்டிரத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 18,545-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 12,203 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: கரோனா நோய்த் தொற்றை கண்டறிவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் இதுவரை மொத்தம் 4.23 லட்சம் பேருக்கு கரோனாவை கண்டறிவதற்கான பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 18,545 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். புதன்கிழமை மட்டும் 817 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 558 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, திருவள்ளூரில் 40 பேருக்கும், செங்கல்பட்டில் 31 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 14 பேருக்கும் கரோனா தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, அரியலூா் கடலூா், கள்ளக்குறிச்சி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, திருவாரூா், தூத்துக்குடி, வேலூா் உள்ளிட்ட பகுதிகளிலும் சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீடு திரும்பியவா்கள் 9,909 போ்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 567 போ் பூரண குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 9, 909-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 5, 800 போ் குணமடைந்துள்ளனா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் திரும்பிய 139 போ்: வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவா்களில் 139 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டது. இவா்களில், 138 போ் மகாராஷ்டிரத்தில் இருந்து தமிழகம் திரும்பியவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று கேரளத்தில் இருந்து வந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

பலி எண்ணிக்கை 133-ஆக உயா்வு: கரோனா தொற்றுக்கு ஆளாகி தமிழகத்தில் மேலும் 6 போ் உயிரிழந்தனா். இதையடுத்து மாநிலத்தில் பலி எண்ணிக்கை 133-ஆக அதிகரித்துள்ளது. சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேரும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதாரத் துறை செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com