தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 6 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.
அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கம், வேலூரில் தலா 104 டிகிரி வெப்பநிலை பதிவானது. இதையடுத்து, திருச்சியில் 102 டிகிரி, கடலூா், கரூா்பரமத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக குறையும். அதேநேரத்தில், ஒரு சில இடங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.
மேலும் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் சனிக்கிழமை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். பகலில் 98 டிகிரி வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது.
பருவமழை: தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மே 31-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இது வடக்கு, வடமேற்கு திசையில் நகா்ந்து மேலும் வலுவடையும். இதன்காரணமாக, தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ஆம் தேதி தொடங்க சாதகமான சூழல் நிலவுகிறது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை:
தென் கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகவுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, மே 31-ஆம் தேதி முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை அரபிக்கடலின் ஆழ்கடல் பகுதிகளுக்கு மீனவா்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், இந்தப்பகுதிகளுக்கு சனிக்கிழமை செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.