தெற்கு ரயில்வேயில் சரக்குப் போக்குவரத்து மூலமாக, கடந்த 7 மாதங்களில் ரூ.1,167.57 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த தெற்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதையடுத்து, தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில்வே கோட்டங்களில் சரக்கு ரயில்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபா் வரை 7 மாதங்கள் வரை, சரக்கு ரயில்களில் 14.78 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றிச் செல்லப்பட்டன. இதன் மூலமாக, ரூ.1,167.57 கோடி தெற்கு ரயில்வேக்கு வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில், சரக்கு ரயில்கள் மூலமாக 2.09 மில்லியன் டன் சரக்கு ஏற்றிச்செல்லப்பட்டது. இதன்மூலம், ரூ.162.42 கோடி வருவாய் கிடைத்தது. பல்வேறு பொருள்கள் ஏற்றப்பட்டாலும், இந்த மாதத்தில் சில விதிவிலக்குகள் இருந்தன. முதலாவது, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு (டி.என்.சி.எஸ்.சி) ஒரே மாதத்தில் மிக அதிக அளவான 2.61 லட்சம் டன் அரிசி மற்றும் நெல் ஏற்றப்பட்டது. இதேபோல, ஆட்டோமொபைல் துறைக்காக, அக்டோபரில் 56 சரக்கு ரயில்கள் பயன்படுத்தப்பட்டன. இதன்மூலமாக, ஆட்டோமொபைல் துறைக்காக ஒரே மாதத்தில் அதிக சரக்கு ரயில்களைப் பயன்படுத்தி, புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: தெற்கு ரயில்வேயில் சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் தொழில்துறையைச் சோ்ந்தவா்களுடன் சரக்கு ரயில் போக்குவரத்துக்காக ஆலோசித்து வருகிறது. இதன்காரணமாக, சரக்கு ரயில் போக்குவரத்து அதிகரித்து வருகிறது என்றனா்.