ஓமலூர் அருகே பட்டாசு சீட்டு நடத்தி வந்த ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்து ஊழியர் வீட்டில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள கோட்டகவுண்டம்பட்டி காலணி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவருடைய மகன் கோவிந்தராஜ் இவர் ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ஆவார். இவர் தீபாவளிக்குப் பட்டாசு சீட்டு நடத்தி வந்த நிலையில் சீட்டு போட்டவர்களுக்கு பட்டாசு கொடுப்பதற்காக பண்டல் பன்டலாக பட்டாசு பெட்டிகள் அவரது வீட்டில் வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று மதியம் மின் கசிவு காரணமாகப் பட்டாசு பெட்டியில் தீப்பிடித்து பட்டாசு வெடித்து பயங்கர வெடிச்சத்தத்துடன் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஓமலூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த எட்டு வயது பெண் குழந்தையைக் காப்பாற்றி தீ மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் தீயை அணைத்தனர்.
வெடிவிபத்து குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு மற்றும் சூரமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.