நாமக்கல் ஆஞ்சனேயர் கோவிலில் மாநில பாதுகாப்புத்துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழக காவல்துறையில் கோவில் பாதுகாப்புக்கென தனி பாதுகாப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவின் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் ஒரு குழுவினர் நாமக்கல் ஆஞ்சனேயர் கோவிலுக்கு புதன்கிழமை காலை வந்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்குள்ள மண்டபத்தில் காவல்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், உளவுப்பிரிவு அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், கோவிலின் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்தார்.
குறிப்பாக ஆஞ்சனேயர் கோவில் வரும் பக்தர்களின் வசதிக்காக ஆம்புலன்ஸ் சேவை, வாகனங்கள் நிறுத்தும் இடம் உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோவிலில் தங்கத்தேர் உள்ள அறை, வெள்ளி கவசம் பாதுகாப்பு அறை மற்றும் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் நரசிம்மர் கோவில் வளாகத்திலும் ஆய்வு நடைபெற்றது. நாமக்கல்லில் தொடர்ந்து திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலிலும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் 250 கோவில்களில் இது போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.