திருச்சி: திருச்சியில் குளிர்சாதன வசதியில்லாத திரையங்கில் 8 மாதங்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை காலை திரையிடப்பட்ட எம்ஜிஆர் நடித்த உரிமைக்குரல் திரைப்படத்தை அவரது ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க திரையரங்குகளை மூட மார்ச் மாதம் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கடந்த 8 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டன. நவ.10ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதியளித்தன. இதையடுத்து, திரையரங்குகளை தயார்படுத்தும் பணியில் அதன் உரிமையாளர்கள் ஈடுபட்டனர்.
இதையும் படிக்கலாமே.. தீபாவளி: கோயம்பேட்டிலிருந்து 24 மணி நேரமும் சிறப்பு இணைப்புப் பேருந்துகள்
தயாரிப்பாளர்களின் அறிவிப்பால் புதுப்படங்கள் வெளியிடப்படவில்லை.
இதனால், திருச்சி மாநகரில் பெரும்பாலான தியேட்டர்களில் செவ்வாய்க்கிழமை காலை காட்சி திரையிடப்படவில்லை. திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள பேலஸ் திரையரங்கத்தில் உரிமைக்குரல் திரையிடப்பட்டது.
3 நாள்களுக்கு இந்த படம் திரையிடப்படுகிறது. தீபாவளி முதல் தெலுங்கு ரீமேக் படம் (நந்து) திரையிடப்படவுள்ளது.
இதேபோல, மாநகரில் 4 திரையரங்குகளில் செவ்வாய்க்கிழமை படங்கள் திரையிடப்பட்டன. ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் நின்று டிக்கெட் பெற்றனர். கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி வழங்கப்பட்டது. இருக்கைகளில் சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டனர். பேலஸ் திரையரங்க உரிமையாளர் சந்திரசேகர் கூறுகையில், திருச்சியில் 4 தியேட்டர்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு பழைய படங்கள் திரையிடப்பட்டுள்ளன என்றார்.