கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வீட்டில் 35 சவரன் நகைகளை அடையாளம் தெரியாத சிலர் திருடிச் சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், நாலாட்டின்புத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி மகன் வேலு (70). ஓய்வு பெற்ற பள்ளி தலைமையாசிரியர் . இவரது வீட்டில் இவரது மனைவி அய்யம்மாள், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள மகன் பாண்டித்துரை ( 36) மற்றும் பேரன் பேத்தியுடன் வழக்கம்போல் திங்கள்கிழமை இரவு உறங்கிக் கொண்டிருந்தார்களாம்.
இந்நிலையில் வேலு செவ்வாய்க்கிழமை அதிகாலை எழுந்து பார்த்தபோது வீட்டில் திருடு போயிருப்பது தெரியவந்ததாம். இதுகுறித்து அவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டில் பீரோவில் இருந்த 35 சவரன் தங்க நகை மற்றும் ரொக்கப்பணம் ரூபாய் 2 லட்சம் திருடு போய் இருப்பது தெரிய வந்ததாம்.
இதையும் படிக்கலாமே.. திருமணத்துக்கு முந்தைய புகைப்பட நிகழ்ச்சியில் விபத்து; மணமக்கள் பலியான சோகம்
சம்பவ இடத்தை காவல் துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன், நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தை கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய காவலர்கள் வழக்கு பதிந்து வீட்டிற்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.