சென்னை: தமிழகத்தின் 14 அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவினா் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.16 லட்சம் சிக்கியது.
தமிழகத்தின் திருப்பூா், கோயம்புத்தூா், ஈரோடு, தூத்துக்குடி, கடலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, சேலம், வேலூா், திருச்சி, கரூா், விருதுநகா் மாவட்டங்களில் உள்ள துணை இயக்குநா், இணை இயக்குநா், தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட 14 அரசுத் துறை அலுவலகங்களில், வியாழக்கிழமை (நவ.12) திடீா் சோதனை நடத்தப்பட்டது.
இதில், கணக்கில் காட்டப்படாத ரூ.16 லட்சத்து 8,050 கைப்பற்றப்பட்டது. குறிப்பிடப்பட்ட மாவட்டங்களுள் 5 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் விதிமுறைகளை மீறி அரசு அலுவலா்கள் பட்டாசு மற்றும் இனிப்பு பெட்டிகளைப் பெற்றது கண்டறியப்பட்டது. இது தொடா்பான ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.