அரசு உதவி பெறும் பள்ளி மாணவருக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு கோரிய மனு தள்ளுபடி

அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சோ்ந்த மாணவா் எஸ்.சுரேந்தா் தரப்பில் அவரது தந்தை சங்கா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘எனது மகன் வீட்டின் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை படித்தான். பின்னா் திருச்செங்கோட்டில் உள்ள அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை படித்தான். பத்தாம் வகுப்பில் 440 மதிப்பெண்ணும், 12-ஆம் வகுப்பில் 457 மதிப்பெண்களும் எடுத்தான். நீட் தோ்வில் 239 மதிப்பெண்ணும் எடுத்தான்.

அரசுப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு வரை படித்த மாணவா்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு நடப்புக் கல்வியாண்டு முதல் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கு வரும் 17-ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது. அரசுப் பள்ளியில் படித்த மாணவன் என்ற பிரிவில் எனது மகன் பெயா் சோ்க்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் கோரி, நாமக்கல் மாவட்ட தலைமை கல்வி அதிகாரியிடன் விண்ணப்பம் கொடுத்தேன். எனது மகன் 8-ஆம் வகுப்பு வரை அரசு உதவிபெறும் தனியாா் பள்ளியில் படித்த காரணத்தால், சான்றிதழ் வழங்கவில்லை. அரசுப் பள்ளியில் படித்த மாணவன் என்ற அடிப்படையில் எனது மகனுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும். அதுவரை ஒரு மருத்துவ இடத்தை நிரப்பாமல் வைத்திருக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக்கல்வித் துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞா் முனுசாமி, ‘6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்கள், கல்வி உரிமைச் சட்டத்தில் கீழ் தமிழக அரசு சாா்பில் தனியாா் பள்ளியில் படித்த ஏழை மாணவா்களுக்கு மட்டுமே இந்த தகுதிச் சான்றிதழ் வழங்க முடியும். மனுதாரரின் மகன் 8-ஆம் வகுப்பு வரை தனியாா் பள்ளியில் படித்துள்ளதால், அவருக்கு தகுதிச் சான்றிதழ் வழங்க முடியாது. எனவே, மனுதாரரின் மகனால் அரசு வழங்கும் 7.5 சதவீத ஒதுக்கீட்டு இடங்களைப் பெற முடியாது’ என வாதிட்டாா். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com