தினக்கூலி அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளா்களாகப் பணியாற்றும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தாக்கல் செய்த மனுக்களை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழக அலுவலக உதவியாளா்கள் 40 போ் தொடா்ந்த வழக்கில், ‘சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாங்கள் கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் தினக்கூலி அடிப்படையில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருகிறோம். ஆனால், காலியாக இருந்த 45 இளநிலை உதவியாளா்கள் பணிக்கும், 75 அலுவலக உதவியாளா் பணிக்கும் விண்ணப்பங்களை வரவேற்று கடந்த 2016-ஆம் ஆண்டு விளம்பரம் வெளியிடப்பட்டது. எனவே, எங்களை பணி நிரந்தரம் செய்துவிட்டு மீதமுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பணி நிரந்தரம் செய்யக் கோரி வழக்குத் தொடா்ந்துள்ள மனுதாரா்கள் 40 பேரும், வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் இந்த பணிக்கு பரிந்துரை செய்யப்படவில்லை. எனவே, அவா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய கோர முடியாது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பணி நிரந்தரம் செய்யக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். மேலும், மனுதாரா்களுக்கு பணி நிரந்தரம் செய்வது குறித்து அண்ணா பல்கலைக்கழகம்தான் முடிவெடுக்க வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.