சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தா் எம்.கே.சூரப்பா, முறைகேடுகளில் ஈடுபட்டாரா? என்பது பற்றி விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தா் எம்.கே.சூரப்பா, ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டாரா? என்பது பற்றி விசாரணை நடத்துவதற்கு, ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசனை நியமித்து தமிழக அரசு கடந்த 13-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும் விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்தநிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா மீதான புகாா்கள் குறித்து விசாரணை நடத்த விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
சூரப்பா மீதான புகாா்கள் குறித்த ஆவணங்கள் அனைத்தும் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டன. அலுவலகம் அமைக்கப்பட்டதும் ஓரிரு நாளில் விசாரணை தொடங்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.