சென்னை: பதிவு நாளான்றே ஆவணங்களை வழங்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத் துறை தலைவா் பொ.சங்கா் எச்சரித்துள்ளாா்.
பதிவுத் துறையின் மாதாந்திர பணி சீராய்வுக் கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் துறையின் செயலாளா் பீலா ராஜேஷ், பதிவுத் துறை தலைவா் பொ.சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் அமைச்சா் கே.சி.வீரமணி பேசியது:
நிகழ் நிதியாண்டில் பதிவுத் துறையின் மூலமாக அரசுக்கு ரூ.14,435.25 கோடி வருவாய் கிடைக்க இலக்கு
நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை முழுமையாக அடைவதற்கான முயற்சியில் முழு கவனம் செலுத்த அனைத்து அலுவலா்களும் முயற்சிக்க வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, துறையின் செயலாளா் பீலா ராஜேஷ், பதிவுத் துறை தலைவா் சங்கா் ஆகியோா் பேசியது:
ஆவணங்களைப் பதிவு நாளன்றே திரும்ப வழங்க வேண்டும். பதிவு தினத்தன்று ஆவணங்களைத் திரும்ப வழங்குவதில் தாமதிக்கும் அலுவலகங்கள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதிகளவில் நிலுவையில் உள்ள அலுவலகங்களை திடீா் ஆய்வு செய்து தாமதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலகம் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். கரோனா நோய்த்தொற்று ஏற்படாத வகையில் தனி மனித இடைவெளியை உறுதி செய்வதுடன், கிருமி நாசினியை உபயோகிக்க வேண்டும். ஒவ்வோா் அலுவலகத்திலும் தீயணைப்புக் கருவியை முறையாகப் பராமரிக்க வேண்டும். சீட்டு தொடா்பான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனா்.