ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையிலிருந்து ஆரணி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் தமிழக எல்லைப் பகுதிகளான ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி உள்ளிட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையின் மொத்த கொள்ளளவான 1.84 டிஎம்சியும், மொத்த அடியான 35 அடியில் 29 அடியை தண்ணீர் எட்டியதையடுத்து, ஆரணி ஆற்றில் உபரி நீராக தண்ணீரை திறக்க ஆந்திர பொதுப்பணித்துறை முடிவு செய்தது. அதன் பேரில் இன்று வினாடிக்கு 400 கனஅடி என்ற விதத்தில் தண்ணீர் திறந்தது. இதனால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு ஆந்திர பொதுப்பணித்துறையினர் ஆந்திராவின் பிச்சாட்டூர், எம்எம் கண்டிகை, ராமகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். அதேபோல தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி, லட்சுமிபுரம், பெரும்பேடு உள்ளிட்ட ஆரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திராவில் பெய்யும் மழையைப் பொறுத்து நீர் திறப்பு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கரையோர மக்கள் ஆற்றைக் கடக்கவோ,ஆற்றில் இறங்கிக் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.