கம்பம்: தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சர்க்கரை நோய்,உலக நிமோனியா மற்றும் புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை
உலக சர்க்கரை நோய், உலக நிமோனியா மற்றும் புற்றுநோய் தின விழிப்புணர்வு தேனி மாவட்ட துணை இயக்குநர் உத்தரவின் பேரில் நடைபெற்றது.
மருத்துவ அலுவலர் சுதா தலைமை தாங்கினார், மருத்துவர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சித்த மருத்துவ அலுவலர் சிராஜ்தீன் பேசும் போது, சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள், கண்டறியும் வழிமுறைகள், கரோனா பெருந்தொற்று காலத்தில் நிமோனியா நோய் பற்றிய விழிப்புணர்வு,
அனைத்து மக்களுக்கும் உணவியல், வாழ்வியல் கோளாறுகளால் ஏற்படும் பல்வேறு புற்றுநோய்கள் பற்றிய விழிப்புணர்வு பற்றி பேசினார்.
மேலும் புற்றுநோயின் அறிகுறிகள், சிறிய அறிகுறிகளையும் புறந்தள்ளாமல் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் தீய பழக்க வழக்கங்கள் போன்றவை பற்றியும் தெளிவாக கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மருந்தாளுநர்கள் கணேசன், பசும்பொன், செவிலியர்கள் சுப்புலட்சுமி, ரூபி, இந்திராணி மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.