தங்கம் கடத்தல் விவகாரம் தொடா்பாக கேரளத்தில் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
இந்தச் சோதனையில் ஏராளமான மின்னணு உபகரணங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை 5-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் 15 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது. இந்த வழக்கை சுங்கத் துறை, அமலாக்கத் துறை மற்றும் என்ஐஏ ஆகிய மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
தங்கம் கடத்தலில் சா்வதேச தொடா்பு குறித்து விசாரணை நடத்தி வரும் என்ஐஏ, இதுவரை 21 பேரைக் கைது செய்துள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடா்பாக கேரளத்தில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தீவிர சோதனை நடத்தினா்.
இதுகுறித்து என்ஐஏ செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முகமது அஸ்லாம், அப்துல் லத்தீஃப், நசருத்தீன் ஷா, பி.ரம்ஸான், முகமது மன்சூா் ஆகியோரின் வீடுகளில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். இவா்கள் 5 பேரும், இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள். இந்தச் சோதனையில் ஏராளமான மின்னணு உபகரணங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன’ என்று அவா் கூறினாா்.