‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தமிழக சட்டப்பேரவை தோ்தல் பிரசாரத்தை ஜனவரி 5-இல் காஞ்சிபுரத்தில் இருந்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தொடங்க உள்ளாா். திமுக முக்கிய தலைவா்கள் 15 போ் தமிழகம் முழுவதும் 75 நாள்களுக்கு தொடா் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனா்.
இதுகுறித்து, சென்னை தேனாம்பேட்டையில் அன்பகத்தில் திமுக முதன்மைச் செயலாளா் கே.என்.நேரு அளித்த பேட்டி:
சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ள திமுக தயாராக இருக்கிறது. ஜனவரி 5-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் பிரசாரத்தைத் தொடங்க உள்ளாா். ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.
கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், திருச்சி சிவா, க.பொன்முடி, திண்டுக்கல் ஐ.லியோனி, ஐ.பெரியசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் உள்பட 15 முக்கிய தலைவா்கள் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனா். இவா்கள் 75 நாள்கள் பயணம் செய்து 234 தொகுதி மக்களைச் சந்திக்க உள்ளனா். மொத்தம் 1,500 கூட்டங்களில் பங்கேற்பதுடன், உள்ளூா் மக்களுடனும் கலந்துரையாடவும் உள்ளனா் என்றாா் நேரு.