கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் காவல்துறையின் சார்பில் கடந்த 15 ஆண்டுகளில் காணாமல் போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் அறிவுறுத்தலின்படி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜு தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளர்எம் தங்கவேல், காவல் ஆய்வாளர்கள் பாஸ்கரன், வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2009 முதல் 2020 ஆண்டு வரையில் பதியப்பட்ட 171 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு காணாமல் போன 183 பேரின் விவரங்கள் விசாரிக்கப்பட்டு இதில் 16 வழக்குகளில் தொடர்புடைய 19 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். இதில் இருவர் உயிரிழந்துவிட்டனர் என தெரியவந்தது.
கண்டுபிடிக்கப்பட்டவர்கள் தற்போது கோவை மற்றும் அசாம் மாநிலங்களில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மற்ற வழக்குகள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.