அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் நிவாரண முகாம்களுக்குச் செல்ல சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்குவதால் இன்று பகல் 12 மணிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படுவதாகவும் நீர்வரத்திற்கு ஏற்ப படிப்படியாக இதன் அளவு உயர்த்தப்படும் என்றும் பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மிகைநீர் அடையாறு ஆற்றின் வழியே கடலில் கலப்பதால் ஆற்றின் இரு பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட மண்டலம் 10,11,12 மற்றும் 13ல் உள்ள கானுநகர், சூளைப்பள்ளம், திடீர் நகர், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான் பேட்டை, சித்ரா நகர், கோட்டூர்புரம் ஆகிய அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அருகில் உள்ள சென்னை மாநகராட்சி நிவாரண முகாமுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் தற்போது 169 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.