பவானி: அந்தியூரில் குளிப்பதற்கு தண்ணீர் காயவைக்க ஹீட்டர் போட்டபோது மின்சாரம் பாய்ந்ததில் செவிலியர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
உதகை மாவட்டம், தேவபேட்டா எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, தனலட்சுமி தம்பதி. இவர்களின் மகள் விஜயகுமாரி (26). இவர், கடந்த ஓராண்டாக அந்தியூரைச் சேர்ந்த மருத்துவர் பார்த்தீபன் என்பவருக்குச் சொந்தமான மருத்துவமனையில் தங்கி செவிலியராகப் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை குளிப்பதற்காக தண்ணீரை சூடாக்க ஹீட்டர் போட்டுள்ளார்.
அப்போது, எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். மருத்துவமனையைத் திறப்பதற்காக மருத்துவர் பார்த்தீபன், விஜயகுமாரிக்கு தொலைபேசியில் அழைத்தபோது எடுக்கவில்லை. இதனால், மருத்துவர் பார்த்தீபன், இவரது நண்பர் பிரகாஷ் ஆகியோர் கதவை உடைத்துப் பார்க்கும்போது விஜயகுமாரி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து, அந்தியூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.